
தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 தேர்வர்கள் உயிரிழந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தில்லி ராஜிந்தர் நகர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இணை நிறுவனர்கள் 4 பேர், கார் ஓட்டுநர் என 5 பேர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
தில்லியின், பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில், தொடர் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மூன்று இளம் மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மாணவர் அமைப்புகள் தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பின்றி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி செயல்படும் பயிற்சி மையங்களை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நீண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இணை நிறுவனர்கள் 4 பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். அதோடு, பயிற்சி மையம் இருந்த வெள்ளநீர் சூழ்ந்த சாலையில் சொகுசுக் காரை ஓட்டிவந்த ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். அவர் கார் ஓட்டியதால், பயிற்சி மையத்தில் தரைதளத்துக்கு கீழ் உள்ள அறையின் நுழைவு வாயிலில் அதிக அளவு நீர் உள்ளே புகுந்ததாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
ஓட்டுநர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞர், ஐஏஎஸ் தேர்வர்கள் மரணத்தில் எந்தவித நோக்கமும் அற்றவர் தனது தரப்பைச் சேர்ந்தவர் என்றும், அதனால் அவருக்கு உடனடி ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதங்களை முன்வைத்தார். எனினும், இதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து பயிற்சி மைய இணை நிறுவனர்கள் 4 பேர் உள்பட, கார் ஓட்டுநருக்கும் 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.