
வாரணாசி தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிடவும் சுமார் 61 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
வாரணாசியில் தேர்தலின் கடைசிக் கட்டமாக ஜூன் 1 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அமித் ஷா உள்பட கட்சியின் உயர் தலைவர்கள் பலரும் கடைசி சில நாள்களில் வாரணாசியில் முகாமிட்டுப் பிரசாரம் செய்தனர்.
தேர்தலில் மோடியின் வெற்றி உறுதி, வாக்கு வித்தியாசத்தை அதிகரிப்பதுதான் நோக்கம், சாதனை புரிவோம் என்றும் தலைவர்கள் குறிப்பிட்டனர். எனினும், 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். காலையில் தொடக்கத்தில் சிறிது நேரம் அவர் பின்னடைவைச் சந்தித்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2019 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 6,74,664 வாக்குகளைப் பெற்றிருந்தார். அடுத்ததாக வந்த சமாஜவாதியின் ஷாலினி யாதவ் 1,95,159 வாக்குகளும் காங்கிரஸின் அஜித் ராய் 1,52,547 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 4,79,505.
இந்த முறை மோடி 6,12,970 வாக்குகள் பெற, சமாஜவாதியுடன் இணைந்து எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜித் ராய் 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார். இதே தொகுதியில் நாலாவது முறையாக அஜித் ராய் தோற்றிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.