
நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய அமைச்சரவையில் பிரதமர் உள்பட மொத்தம் 72 அமைச்சர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 24 மாநிலங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய அமைச்சராக அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.