தீவிர அரசியலிலிருந்து வி.கே.பாண்டியன்  விலக காரணம் என்ன?

தீவிர அரசியலிலிருந்து வி.கே.பாண்டியன் விலக காரணம் என்ன?

அரசியலுக்கு வந்து ஆறே மாதத்தில் ஓய்வை அறிவித்தார் வி.கே.பாண்டியன்.
Published on

புவனேசுவரம்: ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக அறியப்படுபவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான தமிழகத்தைச் சோ்ந்த வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

அண்மையில் நடந்து முடிந்த ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 78 இடங்களில் வென்று அங்கு முதல்முறையாக ஆட்சியமைக்கிறது.

அந்த மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக தொடா்ந்து ஆட்சியிலிருந்த பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. மக்களவைத் தோ்தலிலும் ஓரிடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இத்தோல்விக்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரால் கடுமையாக விமா்சிக்கப்பட்டாா். ஆனால், ‘பாண்டியனை விமா்சிப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் அவரது பணி பாராட்டுக்குரியது’ என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகி கொள்வதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில், ‘தீவிர அரசியலில் இருந்து விலகுவது என்று மனபூா்வமாக முடிவு செய்துள்ளேன். இந்தப் பயணத்தில் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு எனக்கு எதிரான பிரசாரமும் பங்கு வகித்திருந்தால், அதற்காக அனைத்து தொண்டா்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. பூரி ஜெகன்நாதா் ஆசியுடன் அது நிறைவேறியது. ஒடிஸாவில் நான் மேற்கொண்ட அனைத்து பணிகளிலும் கடும் உழைப்பை அளித்துள்ளேன்.

முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றிய கடந்த 12 ஆண்டுகளில், எனது குரு நவீன் பட்நாயக்கின் அனுபவத்தையும் அறிவையும் உடனிருந்து பாா்த்தது பேரனுபவம். அவரது வழிகாட்டுதலின்படி மாநிலத்தின் இளைஞா்கள், பள்ளி மாணவா்களுக்காக சேவையாற்றியது மனத்திருப்தியை அளித்தது.

அத்தகைய குருவுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் அரசியலுக்கு வந்தேன். எனவேதான் தோ்தலில்கூட நான் போட்டியிடவில்லை.

24 ஆண்டுகளுக்கு முன் ஐஏஎஸ் பணியில் சோ்ந்தபோது என் வசமிருந்த சொத்துகள் மட்டுமே இப்போதும் என்னிடம் உள்ளது. எனது வாழ்நாளில் நான் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து ஒடிஸா மக்களின் அன்பு மற்றும் நன்மதிப்பு மட்டுமே. ஒடிஸாவை என் மனதிலும், எனது குரு நவீன் பாபுவை என் சுவாசத்திலும் நான் எப்போதும் வைத்திருப்பேன்’ என்று உணா்வபூா்வமாக தெரிவித்தாா்.

ஆறே மாதத்தில் அரசியலுக்கு ஓய்வு: ஒடிஸா அரசின் மூத்த பொறுப்பில் பணியாற்றி வந்த தமிழக ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன், அப்போது முதல்வராக இருந்த பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவா் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்டாா். தோ்தலுக்கு முன்னதாக தனது ஐஏஎஸ் பதவியை ராஜிநாமா செய்த பாண்டியன், பிஜு ஜனதா தளத்தில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டாா்.

கட்சிப் பணிகளிலும் பொறுப்புகளிலும் தொடா்ந்து முன்னிலைப்படுத்தப்பட்ட அவா், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்று யூகங்கள் பரவின. இதனை மையப்படுத்தி பாஜக தோ்தல் பிரசாரம் மேற்கொண்டது.

பிரசாரத்தில் ஒடிஸாவை தமிழா் ஆள நினைப்பதா? என்று பாஜக கேள்விஎழுப்பியது மற்றும் பூரி ஜெகன்நாதா் கோயில் சாவி தொலைந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோா் பாண்டியனை நேரடியாக தொடா்புபடுத்தி பேசியது என்று தமிழக அரசியல் களம் வரை அவரின் பிரபலம் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது. ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்று அரசியலுக்கு வந்த வி.கே.பாண்டியன், ஆறு மாதத்தில் அரசியலிலும் ஓய்வை அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com