
புது தில்லி: புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான தயார்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் கோடையில் சிவ பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பனிலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று இந்துக்கள் நினைப்பதுண்டு.
அவ்வளவு புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் ஜம்முவில் இருந்து தங்கள் யாத்திரையைத் தொடங்குவார்கள்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான தயார்நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள், எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, நூதன வழிகளில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதன் மூலம் முன்னுதாரணமாக விளங்க நரேந்திர மோடி அரசு உறுதிபூண்டுள்ளதாக அமித்ஷா கூறினார்.
இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை இயக்குநர், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே மற்றும் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் மத்திய ஆயுதப் படைகளின் ஜெனரல், தலைமைச் செயலாளர், ஜம்மு காஷ்மீர் டிஜிபி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.