
சராசரியாக ஒரு மாதத்தில் 11க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நிகழ்வதாக மத்திய அரசை காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நேற்று(ஜூன் 18) காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சரக்கு ரயிலின் ஓட்டுநா் மற்றும் துணை ஓட்டுநரும் இந்த விபத்தில் உயிரிழந்தனா்.
47 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு குழந்தை உள்பட 4 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்துக்கு ரயில்வே துறையின் கவனக்குறைவே முக்கிய காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பதவி விலக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், 2014க்கு பின், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பின், இந்தியாவில் சராசரியாக ஒரு மாதத்தில் 11க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நிகழ்வதாக மத்திய அரசை விமர்சித்து காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது.
மோடியின் மோசமான கொள்கைகளால் ரயில்வே பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இந்த ரயில் விபத்துகளை தடுப்பதற்காக அரசு என்ன செய்கிறது? என்ற கேள்வியையும் பிரதமர் மோடியின் முன்வைத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.