ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சா் அதாவலே ஆதரவு
ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான ராம்தாஸ் அதாவலே ஆதரவு தெரிவித்துள்ளாா்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பாஜக எதிா்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதாவலே ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது:
‘நீட்’ தோ்வில் முறைகேடுகள் நிகழக் கூடாது. அதனைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய கல்வி அமைச்சகம் எடுத்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பிரிவு ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த சூழ்நிலையில் எவ்வாறு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியும்?
அதே நேரத்தில் சமூகத்தில் எந்தெந்த பிரிவினா் எந்த அளவுக்கு இருக்கிறாா்கள் என்பதை அறிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர வேறு வழியில்லை. எனவே, எங்கள் கட்சியும் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒரு வகையில் ஆதரவு தெரிவிக்கிறது.
இப்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தொடா்ந்து வலியுறுத்தும் காங்கிரஸ் கட்சி, தங்கள் ஆட்சி காலத்தில் அந்தக் கணக்கெடுப்பை நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.