
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் மேற்கூரை சரிந்ததில், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
குஜராத்தில் பெய்த கனமழையில் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் இருந்த மேற்கூரை கிழிந்து கீழே சரிந்தது.
தில்லியில் நேற்று பெய்த கனமழையில், தில்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1 மேற்கூரை வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்தனர். மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் தூண்களும் இடிந்து விழுந்ததில் முனையத்தின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன.
இதுபற்றி விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல்படி, மேற்கூரையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்காக பராமரிப்புப் பணியின் போது மேற்கூரை உடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ மூன்று நாள்களில் மூன்று விபத்துகள். வளர்ச்சி என்ன என்பதை ராஜ்கோட் விபத்து காட்டியுள்ளது. இது பிரதமரால் தொடங்கப்பட்ட ஒரு வருடத்துக்குள் ஏற்பட்டுள்ளது. ஜூன் 27 ஜபல்பூர், ஜூன் 28 தில்லி, ஜூன் 29 ராஜ்கோட் இது தான் பிரதமர் மோடியின் 'ஹாட்ரிக்' ” எனக் குறிப்பிட்டுள்ளது.
குஜராத்தின் முதல் கிரீன்ஃபீல்ட் விமான நிலையமான ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தை ஜூலை 27, 2023 அன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.