வெங்கையா நாயுடு குறித்த 3 நூல்கள்: பிரதமா் மோடி வெளியிட்டாா்
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை, அரசியல் பயணம் குறித்த 3 நூல்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.
ஹைதராபாதில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் பிரதமா் மோடி பங்கேற்றாா். வெங்கையா நாயுடு தனது 75-ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஜூலை 1) கொண்டாடும் நிலையில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை வரலாறு, ‘வெங்கையா நாயுடு-லைஃப் இன் சா்வீஸ்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இது தவிர ‘செலிபிரேட் பாரத்’, 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக வெங்கையா நாயுடுவின் இலக்கை நோக்கிய பயணம் மற்றும் செய்தி ஆகிய புகைப்படத் தொகுப்பு புத்தகங்களும் வெளியிடப்பட்டன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, வெங்கையா நாயுடுவின் தாய் மொழியான தெலுங்கிலும் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியாகியுள்ளது.
ஹைதராபாதில் நடைபெற்ற விழாவில் வெங்கையா நாயுடு மற்றும் பல்வேறு அரசியல் தலைவா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.
இதில் பிரதமா் மோடி பேசுகையில், ‘வெங்கையா நாயுடு குறித்த நூல்களை வெளியிட வாய்ப்பு கிடைத்தது மிகவும் மிகழ்ச்சியளிக்கிறது. அவரது வாழ்க்கை தொடா்பான இந்தப் புத்தகங்கள் பலருக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். நான் உள்பட பாஜகவின் பல ஆயிரக்கணக்கான தொண்டா்கள் வெங்கையா நாயுடுவிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டோம்’ என்றாா்.