சண்டிகர்: தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமின் பரோல் விண்ணப்பத்தை நீதிமன்ற அனுமதியின்றி பரிசீலனை செய்யக்கூடாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், குர்மீத் ராம் ரஹீம் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், குர்மீத் ராம் ரஹீமுக்கு அதிகப்படியான பரோல் அளித்ததாக, ஹரியாணா அரசுக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்று மூன்று வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற குற்றவாளிகள் எத்தனைப் பேருக்கு இந்த சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து தெரிவிக்கவும், தற்போது பரோலில் இருக்கும் குர்மீத் ராம் மார்ச் 10ஆம் தேதிக்குள் சிறையில் சரணடையவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 மற்றும் 23ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 232 நாள்கள் குர்மீத் பரோலில் இருந்துள்ளார். இந்த நிலையில், ஜனவரி மாதம் 50 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், பிறகு ஜூலை, நவம்பர், மீண்டும் 2024ஆம் ஆண்டு ஜனவரி என முறையே 40 நாள்கள், 30 நாள்கள், 21 நாள்கள், தற்போது 50 நாள்கள் என பரோல் வழங்கப்பட்டிருப்பதை அறிந்து நீதிபதிகள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவரான சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு ஹரியாணா மாநிலம் சனாரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பத்திரிகையாளர் சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாமியாரின் ஆசிரமத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். 15 வருடங்களுக்கு முன்னர் பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தொடர்பாக ஆசிரமங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக எழுதிய அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நகர்வே குர்மீத் ராமிற்கு எதிரான நடவடிக்கைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.