லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கா்  பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி.
லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கா் பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி.

லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கா் பதவியேற்பு

லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
Published on

லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் அமைப்பு விசாரிக்கும். அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவி வகித்தாா். அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். அதன் பின்னா், அந்த அமைப்புக்கு முன்னாள் நீதிபதி பிரதீப் குமாா் மொஹந்தி பொறுப்பு தலைவராக இருந்தாா். கடந்த மாதம் அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்தாா். அந்த அமைப்பில் நீதித் துறையைச் சோ்ந்த உறுப்பினா்களாக முன்னாள் தலைமை நீதிபதிகள் லிங்கப்பா நாராயண சுவாமி, சஞ்சய் யாதவ், ரிது ராஜ் அவஸ்தி ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இவா்களில் ரிது ராஜ் அவஸ்தி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக உள்ளாா். இந்நிலையில், லோக்பால் அமைப்பின் தலைவராக ஏ.எம்.கான்வில்கா் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அவருக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தாா். நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com