புது தில்லி: தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய எஸ்பிஐ மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, மனுவை தள்ளுபடி செய்ததோடு, நாளை மாலைக்குள் விவரங்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதில், தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கவும், தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எஸ்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, விவரங்களை திரட்டி, அதனை சரிபார்க்க அதிக நேரம் தேவைப்படுகிறது. அதோடு, இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து திரட்டப்படும் தகவல்களை ஒன்றிணைக்க வேண்டும், எஸ்பிஐ வங்கிக் கிளைகளிலிருந்து தகவல்களை பெற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தகவல்களை சரிபார்க்காமல் கொடுப்பதாக இருந்தலால், மூன்று வாரத்திலேயே தகவல்களை எஸ்பிஐ திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைக் கேட்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, நன்கொடை வழங்கியவர், நன்கொடை பெற்றவர்களின் தகவல்களை சரிபார்க்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு நாங்கள் உத்தரவிடவில்லை என்று அறிவுறுத்தியது.
எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை சேகரித்து, சீல் வைத்த உறையில் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்கி, தகவல்களை திரட்ட இத்தனை நாள்கள் வங்கி எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்கும்படி வங்கியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 26 நாள்களில், எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்? உங்கள் மனுவில் அதுதொடர்பான எந்த தகவலும் இல்லையே? என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
தீர்ப்பின் அடிப்படையில், எஸ்பிஐ வெளிப்படையாக நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
கடந்த பிப். 15 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த வரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்பில், வங்கி மூலம் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்து, இந்த நடைமுறையை ரத்து செய்து தீரப்பளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்கள் முழு விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும் என்றும் அவற்றை மார்ச் 13 ஆம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காகத் தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பையடுத்து, தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களை வெளியிட ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி எஸ்பிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.