
கேரள அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மக்களவைத் தொகுதியில் இரு எம்.எல்.ஏ.க்கள் வேட்பாளர்களாக களமிறங்கி போட்டியிடவுள்ளனர்.
இடது ஜனநாயக முன்னணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், கேரள முன்னாள் அமைச்சருமான கே.கே. ஷைலஜாவும், ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஷாஃபி பரம்பிலும் வடகரை (கோழிக்கோடு மாவட்டம்) தொகுதியில் போட்டியிடவுள்ளனர்.
ஷாஃபி பரம்பில் பாலக்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர். இதேபோன்று கே.கே. ஷைலஜாவும் கண்ணூர் மாவட்டத்தின் மத்தனூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராவார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவர் ஒரே மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது கேரள அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நடக்கிறது.
இந்த இரு வேட்பாளர்களுமே சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்களால் அங்கீகரித்து கொண்டாடப்பட்டவர்கள். முன்னாள் அமைச்சர் கே.கே. ஷைலஜா மிகப்பெரிய வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.
அதோடு மட்டுமின்றி நிஃபா, கரோனா காலகட்டத்தில் கேரள சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஷைலஜா மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பலராலும் பாராட்டப்பட்டது.
காங்கிரஸ் சார்பில் முதல் கட்டமாக வெளியிடப்பட்ட 39 வேட்பாளர்களின் பெயர்களில் ஷாஃபி பரம்பில் பெயரும் இடம்பெற்றுள்ளது. சமரசமின்றி செயல்படும் சட்டப்பேரவை உறுப்பினராக இவர் பார்க்கப்படுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.