கே.கவிதாவை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலங்கானாவில் நாளை மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் மகளுமான கே கவிதா அமலாக்கத்துறையினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
4-5 மணி நேரங்கள் நடந்து வந்த சோதனைக்கு பிறகு கவிதாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை பிஆர்எஸ் கட்சித் தொண்டர்கள் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கவிதாவை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலங்கானாவில் நாளை மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தில்லி கலால் கொள்கை தொடர்புடைய பண மோசடி வழக்கில் கவிதா குற்றச்சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.