புது தில்லி: தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் எப்போது நடைபெறவிருக்கிறது என்பது குறித்த அறிவிப்புகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி அட்டவணையை இறுதி செய்யும் பணியில், தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து நியமனம் செய்யப்பட்டு, இன்று காலை பதவியேற்றுக்கொண்டனர். புதிய தேர்தல் ஆணையர்கள் பதவியேற்றுக்கொண்ட சில மணி நேரங்களில், தேர்தல் தேதி அட்டவணை குறித்த ஆலோசனையில் இருவரும் பங்கேற்றுள்ளனர்.