தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கு தொடா்பாக கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் திஹார் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, அவரது உடல் நிலை காரணமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜாமீன் கோரிய சத்யேந்தர் ஜெயின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, சரணடைய குறைந்தபட்சம் ஒரு வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஜெயின் கோரினார்.
ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் உடனடியாக சரணடையுமாறு கேட்டுக்கொண்டது. ஜெயின், தனக்கு எதிரான பணமோசடி வழக்கில், உயா்நீதிமன்றத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி உத்தரவை எதிா்த்து கடந்த மே 15 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.