மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த 21 வயதான மாணவி, தன்னை தானே கடத்த முயற்சி செய்து தன்னை விடுவிக்க பெற்றோரிடம் ரூ.30 லட்சம் கேட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதில் மருத்துவ நுழைவு தேர்வுக்காக பயின்று வரும் காவ்யா தகாத் என்கிற மாணவி தனது இரு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இந்த கடத்தலை அரங்கேற்றியதாகவும் அவர் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டது போலான படங்களை பெற்றோருக்கு அனுப்பி பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்பது இவர்களின் திட்டமாக இருந்ததாக தெரிகிறது.
இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
மார்ச் 18-ம் தேதி காவ்யாவின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, கோட்டாவில் காவ்யாவை அவரது தாயார் விட்டுச் சென்றுள்ளார். பெற்றோரை தான் கோட்டாவில் இருப்பதாக நம்ப வைத்த காவ்யா, இந்தூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
நண்பர்கள் அறிந்த ஓரிடத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் புகைப்படம் எடுக்கப்பட்டது பின்னர் காவலர்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவ்யா தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. மேலும், இதனை மாணவியே செய்தாரா அல்லது வேறு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக என்பது குறித்தும் காவலர்கள் விசாரித்து வருவதாக கோட்டா எஸ்.பி. அம்ரிதா துஹான் தெரிவித்தார்.