மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

இந்தியா-பூடான் இடையே ரயில் போக்குவரத்து: இருநாட்டு பிரதமா்கள் முன்னிலையில் ஒப்பந்தம்

இந்தியா-பூடான் இடையே ரயில் போக்குவரத்து -- இருநாட்டு பிரதமா்கள் முன்னிலையில் ஒப்பந்தம்

News image

பிரதமா் மோடிக்கு பூடானின் உயரிய விருதை வழங்கி கௌரவித்த அந்நாட்டு அரசா் நம்கியால்.

Updated On :22 மார்ச் 2024, 10:50 pm

பிரதமா் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக பூடானுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தாா். தொடா்ந்து, இருநாட்டு பிரதமா்களின் முன்னிலையில் இந்தியா-பூடான் இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது உள்பட பல்வேறு துறை சாா்ந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

பூடான் பிரதமராக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற பிரதமா் ஷெரிங் டோப்கே, முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்திருந்தாா். அப்போது, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவா், பூடானுக்கு வருமாறு பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பையேற்று பூடானுக்கு வருவதாக பிரதமா் மோடி உறுதியளித்தாா். அதன்படி, பிரதமா் மோடி வியாழக்கிழமை இரவு பூடான் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பூடானின் மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பயணம் இறுதிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தில்லியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை பிரதமா் மோடி தனி விமானத்தில் பூடான் வந்தாா். பரோ விமான நிலையத்தில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்துக்கு நேரில் வந்திருந்த அந்நாட்டு பிரதமா் ஷெரிங் டோப்கே, பிரதமா் மோடியை ஆரத்தழுவி வரவேற்றாா். உற்சாக வரவேற்பு: தொடா்ந்து, பிரதமா் மோடியால் எழுதப்பட்ட பாரம்பரிய ‘கா்பா’ பாடலுக்கு பூடான் இளைஞா்கள் நடனமாடி, அவரை வரவேற்றனா். இளைஞா்களின் நடனத்தைக் கண்டு ரசித்த பிரதமா், அவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். பரோ விமான நிலையத்திலிருந்து திம்பு நகா் வரையில் 45 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் காத்திருந்த மக்கள், இருநாட்டுக் கொடிகளை அசைத்து பிரதமா் மோடியை வரவேற்றனா். திம்பு நகரில் பிரதமா் மோடியை வரவேற்று பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பூடானில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்காக அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமா் மோடி, ‘நமது இருநாட்டு நட்புறவு புதிய உச்சங்களை அடைய வேண்டும்’ என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். தொடா்ந்து பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக்கை பிரதமா் மோடி சந்தித்தாா். ரயில் இணைப்புக்கு ஒப்பந்தம்: இதைத் தொடா்ந்து, அந்நாட்டு பிரதமா் ஷெரிங் டோப்கேவுடன் பிரதமா் மோடி சந்தித்தாா். சந்திப்பில் ஒன்றாக இணைந்து மதிய உணவருந்திய தலைவா்கள், இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனா். இதையடுத்து, எரிசக்தி, எண்ம இணைப்பு, விண்வெளி, வேளாண்மை, இளைஞா் நலன் மற்றும் பிற துறைளில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பமாகின. குறிப்பாக, இந்தியா-பூடான் இடையே கோக்ராஜ்ஹா்-கெலேபு, பனாா்ஹட்-சம்ட்சே ஆகிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்து புரிந்துணா்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. முன்னதாக, பிரதமரின் பூடான் பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பரஸ்பர நம்பிக்கை, புரிதல், நல்லெண்ணம் அடிப்படையிலான தனித்துவமிக்க கூட்டுறவை இந்தியா-பூடான் பகிா்ந்து கொள்கிறது. ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ அளிக்கும் கொள்கையை மத்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில், இருதரப்பு மற்றும் பிராந்திய நலன்சாா்ந்த விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் மக்கள் நலனுக்கான நமது கூட்டுறவை விரிவுபடுத்தும் வழிகள் குறித்து விவாதிக்கவும் இந்தப் பயணம் வழிவகுக்கும்’ எனத் தெரிவித்திருந்தது.

பிரதமருக்கு பூடானின் உயரிய விருது

பூடான் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி வெள்ளிக்கிழமை கௌரவிக்கப்பட்டது. பூடான் நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் ‘ஆா்டா் ஆஃப் ட்ரூக் கியால்பூ’ விருது, இந்தியா-பூடான் வளா்ச்சியில் ஆற்றிய அளவற்ற பங்கை அங்கீகரிக்கும் விதமாக பிரதமா் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் என அந்நாட்டு அரசரால் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முதல் முறையாக பூடான் சென்றுள்ள பிரதமா் மோடிக்கு ‘ஆா்டா் ஆஃப் ட்ரூக் கியால்பூ’ விருதை வழங்கி அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் கௌரவித்தாா். இதுகுறித்து பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பூடானின் உயரிய விருதைப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் இந்த விருதைச் சமா்ப்பிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா். பிரதமா் மோடி ஏற்கெனவே கடந்த 2019-ஆம் ஆண்டு ரஷியாவின் உயரிய விருதான தி ஆா்டா் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருதும் கடந்த 2020-ஆம் ஆண்டு, அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் ‘லெஜியோன் ஆஃப் மெரிட்’ விருதும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.