மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் பாஜக 4-5 இடங்களில் வெற்றி பெறும் என்று ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏசியாநெட் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நிச்சயமாக மீண்டும் ஆட்சிக்கு வரும். கேரளத்திலும் பாஜக குறைந்தது 4-5 இடங்களைக் கைப்பற்றும். திருச்சூர் தொகுதியில் வெற்றி 100 சதவீதம் உறுதி.
திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபியும், திருவனந்தபுரம் மற்றும் அட்டிங்கல் தொகுதிகளில் முறையே மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் வி முரளீதரனும் வெற்றி பெறுவார்கள். ஆலப்புழா தொகுதியில் மூத்த பெண் தலைவர் ஷோபா சுரேந்திரனுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.
தனது வயது முதிர்வு காரணத்தால் மீண்டும் தீவிர அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.