உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவருக்கு உணவில் சிறிது சிறிதாக விஷம் வைக்கப்பட்டதாக குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால், அவர் மாரடைப்பால்தான் மரணம் அடைந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரி, மயக்கமுற்ற நிலையில், வியாழக்கிழமை இரவு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பலியானதாகக் கூறப்படுகிறது. அவரை சிறைத் துறை அதிகாரிகள் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
முக்தார் அன்சாரி, ஒரு கொலைக் குற்றவாளி. இவர் ஐந்து முறை மௌ சடார் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். இவர் மீது 60 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.