காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீலின் மருமகள் இன்று பாஜகவில் இணைந்தார்.
மும்பையில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாட்டீல் இன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஃபட்னாவிஸ் வரவேற்றார். தொடர்ந்து ஃபட்னாவிஸ் கூறியதாவது, "சிவ்ராஜ் பாட்டீல் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்.
இன்று அவரது குடும்பத்தில் இருந்து அர்ச்சனா பாட்டீல் எங்கள் கட்சிக்குள் நுழைவது பெரிய விஷயம். சிவராஜ் பாட்டீலுக்கு பெரிய பாரம்பரியம் உள்ளது. அர்ச்சனா அந்த பாரம்பரியத்துடன் வந்துள்ளார். இது கட்சியை பலப்படுத்தும். பிரதமர் மோடியின் பணியால், அவர் கட்சியில் இணைந்துள்ளார்,'' என்றார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2008 வரை மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.
மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 மற்றும் மே 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் மகாராஷ்டிரம் ஆகும்.