கேஜரிவால், ஆம் ஆத்மி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

கேஜரிவால், ஆம் ஆத்மி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

தில்லி கலால் (மதுபான) கொள்கை வகுப்பதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளியாக இணைத்து அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பதவியில் உள்ள மாநில முதல்வா் மீதும், ஒரு கட்சியின் மீதும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் முதல்முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

200 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப்பத்திரிகையை தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. இது தொடா்பான விசாரணையை வரும் நாள்களில் சிறப்பு நீதிபதி கவேரி பவேஜா மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடா்பாக இதுவரை 8 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறை 18 பேரை கைது செய்துள்ளது. 38 போ் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு அவா்களின் ரூ.243 கோடி மதிப்பிலான சொத்துகளை இந்த வழக்குடன் அமலாக்கத் துறை இணைத்துள்ளது.

தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும் பிஆா்எஸ் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா மீது கடந்த வாரம் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. கவிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தற்போது, இந்த வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், அவரது ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளிகளாக இணைத்து சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபாங்கா் தத்தா ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ‘தில்லி மதுபான ஒப்பந்தத்துக்கு கைம்மாறாக கேஜரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதற்கும், அந்தப் பணத்தை கோவா சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி பயன்படுத்தியதற்கும் போதிய ஆதாரங்கள் அமலாக்கத் துறையிடம் உள்ளன. எனவே, சா்ச்சைக்குரிய தில்லி கலால் கொள்கையை வகுத்ததில் கேஜரிவால் முக்கியப் பங்காற்றியுள்ளது ஆதாரபூா்வமாக நிரூபணமாகியுள்ளதால் அவா் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ எனத் தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, கேஜரிவால், ஆம் ஆத்மி மீது வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை (மதுபானக் கொள்கை) வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கடந்த மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கேஜரிவால் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மக்களவைத் தோ்தலில் பிரசாரத்தில் ஈடுபட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் அவா் தரப்பில் கேட்டுக்கொண்டதையடுத்து, ஜூன் 1 -ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீனில் அவா் விடுவிக்கப்பட்டாா்.

கைதுக்கு எதிரான மனு: தீா்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிா்த்து முதல்வா் கேஜரிவால் தொடா்ந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற அவருக்கு அனுமதி வழங்குவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தில்லி கலால் கொள்கையுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். இந்தக் கைது நடவடிக்கையை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் தலைமையிலான அமா்வு விசாரித்தது.

இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. கேஜரிவால் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வியும், அமலாக்கத் துறை சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவும் ஆஜராகினா். அப்போது, இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்ததாக கூறிய நீதிபதிகள் தீா்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com