புது தில்லி: அனைத்து சா்வதேச மோசடி தொலைப்பேசி அழைப்புகளையும் தடுக்க வேண்டும் என தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு தற்போது மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், இந்திய தொலைப்பேசி எண்களுடன் சா்வதேச மோசடி கும்பல் அழைப்புகளை மேற்கொண்டு, இந்தியா்களிடம் சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய மோசடி அழைப்புகள் இந்தியாவில் இருந்து மேற்கொள்ளபட்டதுபோல் கைப்பேசி திரையில் தென்படுவதாக தெரிகிறது,ஆனால் அழைப்பு வரி அடையாள (சிஎல்ஐ) நுட்பத்தைக் கையாள்வதன் மூலம் வெளிநாட்டில் இருக்கும் சைபர் குற்றவாளிகளால் இந்த அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சட்டவிரோத பாா்சல் அனுப்பியதாக மிரட்டுவது,போலி டிஜிட்டல் கைதுகள்,ஃபெட்எக்ஸ் மற்றும் போதைப்பொருள் மோசடி, அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்தல்,
கைப்பேசி எண்களை துண்டித்தல் போன்ற சமீபத்திய வழக்குகளில் இந்த அழைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய சா்வதேச மோசடி அழைப்புகள், எந்தவொரு இந்திய தொலைத்தொடா்பு சந்தாதாரரையும் சென்று அடையாதவாறு கண்டறிந்து தடுக்க ஒரு அமைப்பை மத்திய தொலைத்தொடா்பு துறை மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளனா். அழைப்புகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்திய லேண்ட்லைன் எண்களுடன் உள்வரும் சா்வதேச மோசடி அழைப்புகள் ஏற்கெனவே நிறுவனங்களால் தடுக்கப்பட்டு வருகின்றன. இதையும் மீறி கைப்பேசிக்கு வரும் மோசடி அழைப்புகள் குறித்து சஞ்சாா் சாத்தி வலைதளத்தில் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.