லாவோஸில் இருந்து 13 இந்தியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளதாக லாவோஸில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சமீபக் காலங்களில் தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டுக்கு தகவல் தொழில்நுட்ப பணி என்றும் டிஜிட்டல் சேவைகளை சந்தைப்படுத்தும் மேலாண்மை பணி என்றும் தமிழக இளைஞா்களை அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துகின்றனா். இதற்காக இளைஞா்களைக் கவா்ந்து அழைத்து செல்லும் முகவா்கள் துபை, தாய்லாந்து, சிங்கப்பூா் மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனா்.
இதுபோன்ற மோசடி வலையில் தமிழக இளைஞா்கள் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கை உணா்வுடன், ஆள்சோ்ப்பு முகவா் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும்.
மேலும், வேலைக்கான விசாவின் உண்மைத்தன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன் பணிபுரிய செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அட்டாபியூ மாகாணத்தில் உள்ள ஒரு மரத் தொழிற்சாலையில் இருந்து ஏழு ஒடியா தொழிலாளர்கள் உட்பட 13 இந்தியர்களையும், லாவோஸின் போக்கியோ மாகாணத்தின் கோல்டன் ட்ரையாங்கிள் என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தைச் சேர்ந்த 6 இந்திய இளைஞர்களையும் வெற்றிகரமாக மீட்டு நாடு திரும்பியுள்ளதாக லாவோஸில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தூதரகம் சமூக வலைதள பதிவில், இதுவரை 428 இந்தியர்களை லாவோஸ் பிடிஆரில் இருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. லாவோஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கு இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
லாவோஸுக்கு வரும் இந்தியத் தொழிலாளர்கள் இதுபோன்ற மோசடி வலையில் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.