
தில்லிக்கு இப்போதைக்கு மழையெல்லாம் கிடையாது, ஆனால், வெயில் பதிவாகி, பல புதிய சாதனைகள் மழையாகப் பொழியும் என்றும், தில்லியில் 122 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது.
கேரளம், தமிழகம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மழைப்பொழிவு ஆங்காங்கே பதிவான நிலையில், தலைநகர் புதுதில்லி உள்பட வட மாநிலங்களில் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி வந்தது.
இந்த நிலையில் 50 டிகிரி செல்சியஸ் (122 ஃபாரன்ஹீட்) வரை வெயில் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தில்லியின் நிலை இப்படியிருக்க, ராஜஸ்தான் மாநிலம் சுருவில், செவ்வாயன்று 50.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருக்கிறது. நாட்டிலேயே மிக அதிக வெப்பம் பதிவான பகுதியாகவும் இது மாறிவிட்டது. இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 50.8 டிகிரி செல்சியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவானதில் முதலிடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்ததே அதிகபட்சமாக இன்றுவரை உள்ளது.
தில்லியில் கடுமையான வெப்பம் நிலவக் காரணம், கடுமையான வெப்பம் கொளுத்தும் ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்கள் அமைந்திருக்கும் மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதே என கூறப்படுகிறது. இதன் தாக்கத்தால்தான் தில்லியின் புறநகர்ப் பகுதிகளில் கடும் வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது என வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் திங்கள்கிழமை(மே 20) தில்லியில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் பதிவாகியிருந்தது. உச்சபட்சமாக தில்லியின் நஜப்கர் பகுதியில் வெப்பநிலை 47.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.