அன்மோல் பிஷ்னோய்
அன்மோல் பிஷ்னோய்

அமெரிக்காவில் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி: நாடு கடத்த கோரிக்கை

தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் பரிந்துரை.
Published on

தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் பரிந்துரையை மத்திய உள்துறைக்கு மும்பை காவல் துறை அனுப்பியுள்ளது.

கடந்த ஏப்.14-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகா் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு தாமே காரணம் என்று தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் தெரிவித்தாா். சல்மானை கானை கொல்ல அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து கடந்த அக்.12-ஆம் தேதி பாந்த்ராவில் மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

இந்த குற்றங்கள் உள்பட மேலும் சில குற்ற வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவா் அமெரிக்காவில் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் மும்பை காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் பரிந்துரையை மத்திய உள்துறைக்கு மும்பை காவல் துறை அனுப்பியுள்ளது. அந்தப் பரிந்துரை மத்திய வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்படும் என்று மும்பை காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், குஜராத் மாநிலம் சபா்மதி பகுதியில் உள்ள சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com