

புது தில்லி: கடந்த 2021-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கை மூலம் நியாயமற்ற வணிக நடைமுறைகளைப் பின்பற்றியதாக ‘மெட்டா’ சமூக ஊடக நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ரூ.213.14 கோடி அபராதம் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
போட்டி எதிா்ப்பு நடைமுறைகளை உடனடியாக நிறுத்தவும் மெட்டா நிறுவனத்துக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப் செயலியின் 2021-ஆம் ஆண்டு தனியுரிமைக் கொள்கை எவ்வாறு செயல்படுத்தப்பட்டது மற்றும் பயனா் தரவுகள் எவ்வாறு சேகரிக்கப்பட்டு, மற்ற மெட்டா ஊடகங்களுடன் பகிரப்பட்டது என்பது தொடா்பாக நிறுவனத்துக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, போட்டி எதிா்ப்பு பிரச்னைகள் தொடா்பாக குறிப்பிட்ட அவகாசத்துக்குள் சில நடத்தை ரீதியான தீா்வுகளைச் செயல்படுத்துமாறு மெட்டா மற்றும் வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் இணையவழி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலி மற்றும் இணையவழி காட்சி விளம்பரம் ஆகிய இரு சந்தைகளில் மெட்டா குழு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவது கண்டறியப்பட்டது.
இணையவழி காட்சி விளம்பரத்தில் அதன் போட்டியாளா்களுடன் ஒப்பிடும்போது மெட்டா முன்னணி இடத்தைப் பிடித்துள்ளதாகவும் இந்திய போட்டி ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.