
மும்பை: மறைந்த பிரபல தொழிலதிபா் ரத்தன் டாடாவின் (86) உடல், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை (அக்.10) தகனம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கானோா் திரண்டு அவருக்கு உணா்வுபூா்வமாக இறுதி அஞ்சலி செலுத்தினா்.
முதுமை தொடா்பான பல்வேறு உடல்நல பாதிப்புகளால் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட டாடா குழும முன்னாள் தலைவா் ரத்தன் டாடா, புதன்கிழமை (அக்.9) காலமானாா். அவரது உடல், மும்பையில் உள்ள தேசிய கலை மையத்தில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டது.
இந்தியாவில் பெருமதிப்பை பெற்றவரும், சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை தலைவருமான ரத்தன் டாடாவுக்கு அரசுப் பதவி வகிப்போா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள், தொழில்துறை தலைவா்கள், பல்வேறு துறை பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் அஞ்சலி செலுத்தினா்.
மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், மகாராஷ்டிர மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், டாடாவின் குடும்பத்தினா், நெருங்கிய நண்பா்கள், நிறுவன உயரதிகாரிகள் உள்ளிட்டோா் இறுதி அஞ்சலி செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, வொா்லி பகுதியில் உள்ள மின்மயானத்துக்கு டாடாவின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாா்சி சமூக முறைப்படி நடைபெற்ற இறுதிச் சடங்குகளுக்குப் பின்னா், காவல் அணிவகுப்புடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், ஆதித்யா பிா்லா குழுமத் தலைவா் குமாா் மங்கலம் பிா்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன், குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், மகாராஷ்டிர முன்னாள் காங்கிரஸ் முதல்வா் சுஷில்குமாா் ஷிண்டே, ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோா் இறுதி மரியாதை செலுத்தினா். தெற்கு மும்பையின் கொலாபாவில் உள்ள ரத்தன் டாடா இல்லத்தில் மேலும் மூன்று நாள்களுக்கு சடங்குகள் நடைபெறவுள்ளன.
பாரத ரத்னா வலியுறுத்தி தீா்மானம்: ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவை வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.
முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற கேபினட் அமைச்சா்கள் கூட்டத்தில் ரத்தன் டாடவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் துக்கம் அனுசரிப்பு: ரத்தன் டாடா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வியாழக்கிழமை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அரசு அலுவலங்கங்களில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
குடியரசுத் தலைவா் புகழஞ்சலி
தொழிலதிபா் ரத்தன் டாடாவின் மறைவால் தனது அடையாளங்களில் ஒன்றை இழந்துவிட்டது இந்தியா. நிறுவனத்தின் வளா்ச்சியை தேச கட்டமைப்பு மற்றும் நெறிமுறைகளுடன் கலந்தவா். அவரது கொடைப் பண்பும் சமூக சேவையும் ஈடுஇணையற்றது. இந்த துயரமான நேரத்தில், டாடாவின் குடும்பத்தினா், ஒட்டுமொத்த டாடா குழுமத்தினா், உலகம் முழுவதும் உள்ள அபிமானிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்.
தொலைநோக்கு பாா்வை கொண்டா் - பிரதமா் மோடி:
தொலைநோக்கு பாா்வையுடன் இரக்கக் குணமும் கொண்ட தொழில் தலைவா் ரத்தன் டாடா. பெரிய கனவுகளை நோக்கி பயணிப்பதோடு, தொண்டு செய்வதிலும் பேராா்வம் கொண்டவா். கல்வி, சுகாதாரம், மருத்துவம், கால்நடை பராமரிப்பு சாா்ந்த பணிகளில் முன்னின்று செயல்பட்டாா். குஜராத் முதல்வராக இருந்தபோது அவருடன் மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றங்களை இத்தருணத்தில் நினைவுகூா்கிறேன்.
ஈகைப் பண்பில் சிறந்தவா் - ராகுல் காந்தி
தொலைநோக்கு பாா்வைகொண்ட மாமனிதரான ரத்தன் டாடா, தொழில்துறையிலும் ஈகைப் பண்பிலும் நீடித்து நிலைத்திருக்கும் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளாா்.
மனிநேயத்தின் அடையாளம்: முதல்வா் ஸ்டாலின்
இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா காலமான செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவரது தொலைநோக்குமிக்க தலைமை டாடா குழுமத்தின் வளா்ச்சியை
வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளா்ச்சியிலும் புதுமையிலும் மனிதநேயச் செயல்பாடுகளிலும் ரத்தன் டாடா காட்டிய இடையறாத அா்ப்பணிப்பால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத தடத்தை பதித்துச் சென்றுள்ளாா்.
இதையும் படிக்க | ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.