
ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில், இந்த கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர் சேர்க்கை குறைந்தாலும், தற்கொலைகள் குறையாத அவலத்தை எடுத்துரைக்கின்றன தரவுகள்.
மருத்துவம் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் பயில விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முதல் தேர்வாக இருக்கும் கோடா நகர பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த எட்டு ஆண்டுகளாக, கரோனா பொதுமுடக்கக் காலத்தைத் தவிர்த்து, தொடர்ந்து மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்தே வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 28 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுதான் கடந்த 8 ஆண்டுகளில் அதிகபட்சமாகும்.
இந்த ஆண்டில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டிருந்தாலும் கூட, இந்த எண்ணிக்கை ஒரு அபாயகரமானதாகவே உள்ளது. காரணம். நாடு முழுவதும் இதுபோன்ற பயிற்சி மையங்கள் அதிகரித்தது, கோடா பயிற்சி மையங்கள் அளிக்கும் ஆன்லைன் பயிற்சி போன்ற பல்வேறு காரணங்களால், கோடா நகரில் உள்ள பயிற்சி மையங்களில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
கடைசியாக, நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் கடந்த 16ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆண்டில் மட்டும் இது 15வது தற்கொலை சம்பவம். கடந்த மாதமும், இதே போன்று ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு வரை, கோடா நகர பயிற்சி மையங்களில், மாணவர் சேர்க்கை நிரம்பி வழிந்த நிலையில் இந்த ஆண்டுதான் முதல் முறையாக சேர்க்கை குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 முதல் 35 சதவீத மாணவர் சேர்க்கை குறைந்திருக்கிறது. ஆனால், தற்போதுவரை தற்கொலை எண்ணிக்கை குறையவில்லை.
2022ஆம் ஆண்டும் 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள், 2018ல் இது 20 ஆகவும், 2016ஆம் ஆண்டில் தற்கொலை எண்ணிக்கை 17 ஆகவும், 2015ஆம் ஆண்டு 18 ஆகவும் இருந்துள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.