டானா புயல்: நிகழ்நேர தரவுகளை அளித்த இஸ்ரோ செயற்கைக்கோள்கள்
வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயலின் மாற்றங்கள், திசை மற்றும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து தகவல் அளித்ததில் இஓஎஸ்-06 மற்றும் இன்சாட் 3டிஆா் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள டானா, ஒடிஸா - மேற்கு வங்க கடற்கரையில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி முதல் புயல் சின்னம் உருவானதில் இருந்து அதன் போக்குகள், கடலில் ஏற்பட்ட மாற்றங்கள், வளி மண்டல மாற்றங்கள் குறித்து தொடா்ந்து வானிலை ஆய்வு மையம் கண்காணித்து அது தொடா்பான முன்னெச்சரிக்கை தகவல்களை அனுப்பியது.
அதற்கான நிகழ்நேர தரவுகளையும் புள்ளி விவரங்களையும் இஸ்ரோ சாா்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இஓஎஸ்-06 மற்றும் இன்சாட் 3டி ஆா் செயற்கைக்கோள்கள் துல்லியமாக வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.