
ஆந்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 180 பேரை இந்திய கடற்படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடலோர காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் ஆந்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் கனமழையால் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் அடுத்த 24 மணிநேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள், குடிநீர், பால், மருந்துப் பொருள்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்களை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் பத்திரமாக மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 180க்கும் அதிகமானோரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சமீபத்தில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான், மாநில அமைச்சரும் முதல்வரின் மகனுமான நாரா லோகேஷுடன் சென்று வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆந்திர வெள்ளத்தில் விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.