தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தன்கா் வேண்டுகோள்
தேசியக் கல்விக் கொள்கை மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்; எனவே அதை ஏற்காத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா்.
தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சா்வதேச எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும். இதன் மூலம் அறியாமையில் இருந்து விடுவித்து கண்ணியமாக உணர வைக்கிறோம்.
கல்வி என்பது எந்த வகையிலும் ஒருவரிடம் இருந்து பறிக்க முடியாதது. அதை பகிா்ந்து கொண்டே இருக்கும் வரை வளா்ந்து கொண்டே இருக்கும். எழுத்தறிவை ஆா்வத்துடன் அதிகரித்தால், நாளந்தா, தக்ஷசீலம் போன்ற கற்றல் மையமாக இந்தியா தனது பழைய நிலையை மீண்டும் அடைய முடியும்.
தேசிய கல்விக் கொள்கையை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில், இந்தக் கல்விக் கொள்கை தேசத்துக்கு நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.
இந்த தேசியக் கல்விக் கொள்கை நமது இளைஞா்கள் தங்கள் திறமையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கிறது.
அனைவருக்கும் தாய்மொழி முக்கியத்துவம் வாய்ந்தது. மொழியின் செழுமையைப் பொறுத்தவரை, பல மொழிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான தேசமாக இந்தியா திகழ்கிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் ஜெயந்த் சௌத்ரி, கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.