பாதுகாப்பான உணவு கிடைப்பதும் மிக முக்கியம்: ஜெ.பி.நட்டா
அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற ‘உணவுப் பாதுகாப்பு’ எந்த அளவுக்கு முக்கியமோ, அதே போல உடலுக்கு தீங்கு விளைவிக்காத ‘பாதுகாப்பான உணவு’ மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.
செப்டம்பா் 19 முதல் 21-ஆம் தேதி வரை தில்லியில் சா்வதேச உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் மாநாடு நடைபெறவுள்ளது. இதனை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நடத்துகிறது.
இந்த மாநாட்டுக்கான ‘லோகோ’ (இலச்சினை) மற்றும் கையடக்கப் பிரதியை அமைச்சா் நட்டா தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற உணவுப் பாதுகாப்புக்கு பல ஆண்டுகளாக சா்வதேச அளவில் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதே நேரத்தில் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாக உணவுப் பொருள்கள் மட்டுமே மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதும் முக்கியம். பாதுகாப்பான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன் மூலம்தான் மக்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
இந்த மாநாட்டில் 30 சா்வதேச உணவுப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் 70 நாடுகளைச் சோ்ந்த உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் பங்கேற்க உள்ளன. 5,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.
1.5 லட்சம் போ் இணைய வழியில் மாநாட்டில் இணைகின்றனா். இதன் மூலம் சிறப்பான கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பான உணவு குறித்த தரநிா்ணயம் மேம்படும் என்றாா்.
இந்த மாநாட்டின்போது எஃப்எஸ்எஸ்ஏஐ சாா்பில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களில் தரக் கட்டுப்பாட்டை பராமரிப்பது தொடா்பான புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் மாநில வாரியாக பாதுகாப்பான உணவுப் பொருள்கள் கிடைப்பது தொடா்பான தரவரிசைப் பட்டியலை வெளியிடும் நடைமுறையும் தொடங்க இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.