காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்றத்தில் அஸ்ஸாம் முதல்வரின் சர்ச்சைப் பதிவை மறைமுகமாக விமர்சித்தார். இதைப்போல் பேசும் முதலமைச்சர்களை நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வர்ணாசிரமக் கொள்கைகள் பற்றி கடந்த டிசம்பர் 28-ல் வலைதளத்தில் சர்ச்சைக் கருத்தைப் பதிவிட்டார். பின்னர் அதை நீக்கவும் செய்தார்.
இதுகுறித்து பேசிய கார்கே, 'அந்த முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. ஆனால் அவர் ஏற்கனவே காங்கிரஸில் இருந்தார். இப்போது பாஜகவின் செல்லமாக மாறியுள்ளார்.' என மறைமுகமாக அஸ்ஸாம் முதலவரைக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: கடல்களுக்கும் மலைகளுக்கும் நாம் சவால் விடுகிறோம்: மோடி
'விவசாயம் செய்வது, மாடு வளர்ப்பது, வணிகம் செய்வது எல்லாம் வைஷ்யர்களின் இயற்கையான கடமை. அதைப்போல், பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைஷ்யர்களுக்கும் சேவை செய்வதே சூத்திரர்களின் கடமை என ஒரு பாஜக முதல்வர் கூறுகிறார். இப்படிப்பேசும் முதல்வரை கண்டிப்பாக நீக்கியாக வேண்டும்.' எனக் கூறினார்.
'இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் எப்படி ஏழைகளுக்கான திட்டங்களை வகுப்பார்கள்? எனக் கேள்வியெழுப்பினார்' கார்கே.
'பிரதமரிடம் இதைக் கேட்கிறேன், இப்படிப்பட்டவர்களை கட்சியில் வைத்துள்ள நீங்கள் எப்படி சமூக நீதி பெற்றுத் தருவோம் என்கிறீர்கள்? உங்களைச் சார்ந்தவர்கள் எல்லாம் இப்படித்தான் சிந்திக்கிறார்களா? அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படிப்பேசும்போது வருத்தமாக உள்ளது' என அவர் கூறினார்.