வழக்கு தாக்கலின்போது மனுதாரரின் மதம் அல்லது ஜாதியை குறிப்பிடும் நடைமுறையைக் கைவிடுமாறு அண்மையில் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றுமாறு அனைத்து நீதிமன்ற பதிவாளா் அலுவலா்களை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.
நீதிபதி ஹிமா கோலி தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வு இது தொடா்பான உத்தரவை கடந்த ஜனவரி 10-ஆம் தேதி பிறப்பித்தது. ராஜஸ்தான் மாநில குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த திருமண விவாகரத்து வழக்கு விசாரணை இடமாற்றத்துக்கான மனுவைப் பரிசீலித்தபோது இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அந்த மனுவில் மனுதாரா்களான கணவன் மற்றும் மனைவி இருவரின் ஜாதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆச்சரியம் தெரிவித்தபோது, ‘மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடமாற்ற மனுவில் மனுதாரா்களின் ஜாதியைக் குறிப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை. குறிப்பாணையில் இந்த விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும் நிலையில், அதைக் குறிப்பிடாவிட்டால் நீதிமன்றப் பதிவாளா் அலுவலகம் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படும்’ என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களிலோ அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலோ வழக்கு தாக்கலின்போது மனுதாரா் தங்களின் மதம் அல்லது ஜாதியைக் குறிப்பிடவேண்டிய அவசியம் எதுவும் தென்படவில்லை. இது தவிா்க்கப்படவேண்டும். எனவே, அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கலில் மனுதாரா்கள் தங்களின் மதம் அல்லது ஜாதி விவரங்களை குறிப்பிட வேண்டியதில்லை என உத்தரவிடப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தொடா்பாக அனைத்து நீதிமன்றப் பதிவாளா் அலுவலகங்களுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ‘வழக்கு தாக்கலின்போது மனுதாரரின் மதம் அல்லது ஜாதியைக் குறிப்பிடும் நடைமுறையைக் கைவிடுமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.