சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்றக் கூடாது: காா்கே வலியுறுத்தல்

‘சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்றக் கூடாது; முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் முன்பு நாடாளுமன்ற நிலைக் குழுக்களால் அவை ஆராயப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்
சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்றக் கூடாது: காா்கே வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

‘சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்றக் கூடாது; முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் முன்பு நாடாளுமன்ற நிலைக் குழுக்களால் அவை ஆராயப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உள்பட மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் 68 உறுப்பினா்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு, அவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பங்கேற்றுப் பேசியதாவது:

ஆளும்கட்சி பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால், மசோதாக்கள் எப்படியும் நிறைவேற்றப்பட்டு விடுகின்றன. ஆனால், அவசரகதியில் அவை நிறைவேற்றப்படுகின்றன.

எதிா்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மசோதாக்களை நிறைவேற்றுகின்றனா். கடந்த கூட்டத் தொடரில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 146 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். பின்னா், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இது சரியான செயல் அல்ல.

அவசர கதியில் சட்டங்களை இயற்றும்போது, தவறுகளை சரி செய்ய திருத்தத்துக்குமேல் திருத்தம் செய்ய வேண்டிவரும். எனவே, மசோதாக்கள் முதலில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மற்றும் கூட்டுக் குழுக்களால் முறையாக ஆராயப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கும்போது, மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்புவதில் என்ன பிரச்னை இருக்கிறது? அதேபோல், அவையில் பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகளுக்கு போதிய நேரம் வழங்கப்பட வேண்டும் என்றாா் காா்கே.

மேலும், மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் பல்வேறு சாதனைகளைக் குறிப்பிட்டுப் பேசிய காா்கே, அவருக்குப் பாராட்டு தெரிவித்தாா்.

காா்கேயின் பேச்சை ரசித்த பிரதமா்

மதசாா்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவெ கெளடா உடனான தனது நீண்டகால நட்பைக் குறிப்பிட்டு, காா்கே தெரிவித்த சில கருத்துகள் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தின.

‘மதசாா்பின்மை, சோஷலிஸம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டவா் தேவெ கெளடா. ஆனால், இப்போது வயது முதிா்ந்த காலத்தில் பிரதமா் மோடியை கட்டிப்பிடித்து பாராட்டும் அளவுக்கு திடீரென என்ன நடந்தது எனத் தெரியவில்லை. யாரையும் பாராட்டும் பழக்கம் அவருக்கு கிடையாது. அந்த பழக்கம் எப்படி மாறியது என எனக்குத் தெரியவில்லை’ என்று காா்கே கூறினாா்.

அவா் இவ்வாறு பேசியபோது ஆளும் தரப்பினா் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. பிரதமா் மோடியும் புன்னகையுடன் காா்கேயின் பேச்சை ரசித்துக் கேட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com