உத்தர பிரதேச மாநில தகவல் ஆணையம் (ஆர்டிஐ), வாரணாசி மின்சார வாரிய அதிகாரிகளுக்கு கைது ஆணை பிறப்பித்துள்ளது.
ஆர்டிஐ ஆணையம் அனுப்பிய சம்மனை வேண்டுமென்றே புறக்கணித்த காரணத்தாலும் விண்ணப்பதாரர் ஆர்டிஐ-யில் கேட்ட மனுவுக்கு பதிலளிக்காத காரணத்தாலும் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆர்டிஐ அமலுக்கு வந்த 2005 முதல் இது போலான ஆணை இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்டதில்லை.
மாநில தகவல் ஆணையர் அஜய குமார் உபரெட்டி, ஆர்டிஐ சட்ட விதிகளின் அடிப்படையில் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார்.
வாரணாசியில் உள்ள கஜக்புரா என்ற பகுதியைச் சேர்ந்த உமா சங்கர் யாதவ் என்பவருக்கு ரூ.2.24 லட்சத்துக்கான மின்வாரியத்தால் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி.1, 1911 அன்று மின்சார இணைப்பு வழங்கப்பட்டதாக ரசீதில் உள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துளார் யாதவ். அதனை பொருட்படுத்தாத மின்சார ஆணையம் அவருக்கு எதிராக மீட்பு ரசீது (சலான்) பிறப்பித்துள்ளது. இது குறித்து யாதவ், ஆர்டிஐக்கு மனு அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தகவல் ஆணையம் மின்சார வாரியத்திடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டது: 1911-ம் ஆண்டில் வாரணாசியில் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதா? இந்த ரசீது எதனடிப்படையில் கணக்கிடப்பட்டது, ஒரு யூனிட்க்கான கட்டணம் எவ்வளவு? எந்த நிறுவனம் மின்சாரம் அளித்தது மற்றும் உத்தர பிரதேச மின்சார வாரியம் அப்போது இருந்ததா?
அதிகாரிகள் தகவல் ஆணையத்துக்கு பதிலளிக்கவில்லை. ஆர்டிஐக்கு பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட விதிகளில் அனுமதியுள்ளது.
இதையும் படிக்க: குழந்தைகளே, 2 நாள்கள் சாப்பிடாதீர்கள்: சர்ச்சையான எம்எல்ஏ விடியோ
கண்காணிப்பு பொறியாளர் அனில் வர்மா, நிர்வாக பொறியாளர் ஆர்.கே.கெளதம், பொதுத் தகவல் அலுவலர் சர்வேஷ் மற்றும் துணை வட்டார அலுவலர் ரவி யாதவ் ஆகியோரைக் கைது செய்து ஆணையத்தின் முன்பு பிப்.20 அன்று ஆஜர்படுத்துமாறு வாரணாசி காவல்துறைக்கு தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.