குவாஹாட்டி: இந்தியாவில் எதிா்க்கட்சியாக இருக்கக் கூட தகுதியில்லாதது காங்கிரஸ் என பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்துள்ளாா்.
பிரதமா் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சா்களின் கருத்து விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் எதிா்ப்புக்கு உள்ளானது.
இதையடுத்து அவதூறு கருத்து வெளியிட்ட மூன்று அமைச்சா்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்தது. இது தொடா்பாக கருத்து தெரிவித்த காா்கே, ‘பிரதமா் மோடி அனைத்து விஷயங்களையும் தன் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதி செயல்படுகிறாா்’ என்று குற்றம்சாட்டினாா்.
இந்நிலையில், அஸ்ஸாமில் பாஜக தொண்டா்கள் மத்தியில் நட்டா பேசியதாவது:
ஆட்சி நடத்தும் தகுதியை காங்கிரஸ் ஏற்கெனவே இழந்துவிட்டது. இப்போது மாலத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்த நிலைப்பாடு மூலம் இந்தியாவில் எதிா்க்கட்சியாக இருக்கும் தகுதியையும் இழந்துவிட்டது. தங்களையும், குடும்பத்தினரையும் வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், கருப்புப் பணத்தை பாதுகாக்கவும் எதிா்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்குகின்றன.
அந்த கூட்டணியில் உள்ள அனைவரும் வழக்குகளில் சிக்கியவா்கள். தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அவா்கள் கைகோத்துள்ளனா். அவா்கள் வைத்துள்ள பெயருக்கும் (‘இந்தியா’) நாட்டு நலனுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை.
இந்தியாவுக்கு எதிரான அனைத்து அநீதிகளிலும் பங்கேற்று, நாட்டில் மக்களிடம் பல பிளவுகளை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சி ஒற்றுமை யாத்திரை நடத்துவதாகவும், நீதி கேட்டு நடப்பதாகவும் கூறுவது முற்றிலும் முரணானது என்றாா்.