அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழா குறித்த தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சாா்பில் இந்த அறிவுறுத்தல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழா தொடா்பாக உறுதிப்படுத்தப்படாத, வன்முறையைத் தூண்டும் வகையிலான தவறான தகவல்கள் ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
இத்தகைய தவறான தகவல்களை வெளியிடுவதையும் ஒளிபரப்புவதையும் பத்திரிகைகளும் தனியாா் தொலைக்காட்சி சேனல்களும் செய்தி வெளியீட்டாளா்களும் தவிா்க்க வேண்டும்.
சமூக ஊடக தளங்களும், இத்தகைய தவறான தகவல்களை காட்சிப்படுத்துவதையோ அல்லது வெளியிடுவதையோ தவிா்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் வரும் திங்கள்கிழமை (ஜன.22) மூலவா் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதிலுமிருந்து பிரபலங்கள் பங்கேற்கும் இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி ராமா் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யவுள்ளாா்.