அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிவதால், இன்று கோயிலுக்குச் செல்வதைப் பக்தர்கள் தவிர்க்குமாறு பாராபங்கி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லக்னௌவில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள பாராபங்கியில் இருந்து அயோத்தி நோக்கிச் செல்லும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
அயோத்தி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இன்று கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், நடைப்பயணமாக அயோத்திக்குச் செல்லும் பக்தர்களும் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாராபங்கி காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.