பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மரியாதைக்குரியவர் என்று அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் மஹாகத்பந்தன் கூட்டணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு, ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் பிரியப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறும் ஐக்கிய ஜனதா தளம் விரைவில் பாஜகவுடன் இணைந்து புதிய அரசு பொறுப்பேற்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையெல்லாம் உறுதிப்படுத்தும் வகையில், பிகார் அதிகாரிகள் மூன்று பேர் இன்று பிகார் ஆளுநர் மாளிகை சென்றிருப்பதாகவும், இவர்கள் புதிய அமைச்சரவை பொறுப்பேற்புக்கான ஏற்பாடுகள் குறித்து ஆளுநரிடம் கலந்தாலோசனை நடத்தவே சென்றிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, ராஷ்டிரியா ஜனதா தளக் கட்சியின் தலைவர்கள், கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சந்தித்து இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
லாலு பிரசாத் யாதவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், லாலுவின் மனைவி ராப்ரி தேவி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், முதல்வர் நிதீஷ் குமார் மரியாதைக்குரியவர். பல விஷயங்கள் அவரது (நிதீஷ் குமார்) கட்டுப்பாட்டில் இல்லை. ஆர்ஜேடியின் தலைவர்கள் எப்போதும் முதல்வரை மதிக்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாநிலத்தில் எதிர்பாராத பல முன்னேற்றங்கள் குறித்தும் தேஜஸ்வி சுட்டிக்காட்டியதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.