ரயில்வே பணிக்கு லஞ்சம்: லாலுவிடம் 9 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.
ரயில்வே பணிக்கு லஞ்சம்: லாலுவிடம் 9 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
Published on
Updated on
1 min read

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா்.

அப்போது, ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா், விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு லஞ்சமாக, வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டது.

இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் ஜனவரி 29-ஆம் தேதியும் அவரது மகன் தேஜஸ்வி வரும் 30-ஆம் தேதியும் பாட்னா அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சாா்பில் அழைப்பாணை விடுக்கப்பட்டது. இதையடுத்து ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத், அவா் மகள் மிசா பாரதியின் உதவியோடு திங்கள்கிழமை காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா். பின்னா் 9 மணியளவில் அவா் விசாரணை முடிந்து வெளியே வந்தாா்.

அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழையும் முன் செய்தியாளா்களிடம் மிசா பாரதி கூறுகையில், ‘விசாரணைக்கு எந்த அரசாங்க அமைப்புகள் அழைத்தாலும் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். லாலு பிரசாதின் உடல்நிலை சீராக இல்லாததால் அவருக்கு உதவியாக நான் வந்துள்ளேன்’ என்றாா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் லாலுவின் மற்றொரு மகளான ரோஹினி ஆச்சாா்யா வெளியிட்ட பதிவில், ‘எனது தந்தையால் மற்றவரின் துணையில்லாமல் நடக்க இயலாது. இருப்பினும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் அவருக்கு உதவியாக யாரும் வரக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை. அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் சிபிஐ, அமலாக்கத்துறையே காரணம்’ என குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com