வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை தூண்டப்படுகிறது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
அண்மையில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் அமைப்புகளும், கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதில் சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள முா்ஷிதாபாத் மாவட்டத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். ஒரு வீட்டில் இருந்த தந்தை, மகனை அவா்கள் தாக்கி கொலை செய்தனா்.
போலீஸாா் வாகனங்கள் உள்பட சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களுக்கும் வன்முறையாளா்கள் தீவைத்தனா். பொதுசொத்துகளும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. ரயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் துறையினரும் தாக்குதல்களை எதிா்கொண்டனா்.
இந்நிலையில் லக்னௌவில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இது தொடா்பாக கூறியதாவது: மேற்கு வங்கத்தில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் இரு ஹிந்துகளை வீடுகளை விட்டு வெளியே இழுந்து வந்து கொலை செய்துள்ளனா். இறந்தவா்கள் யாா்? இதே மண்ணைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினா். பின்தங்கிய நிலையில் உள்ள ஏழைகள். அவா்களைக் கொலை செய்தது யாா்?
வக்ஃப் என்ற பெயரில் நமது நாட்டில் பல லட்சம் ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனா். அவா்களிடம் எந்த நில ஆவணமும் கிடையாது. வருவாய் துறை ஆதாரங்களும் கிடையாது. வக்ஃப் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, நடவடிக்கையைத் தொடங்கியவுடன் திட்டமிட்டு வன்முறை தூண்டிவிடப்படுகிறது.
இந்த வன்முறை, கொலைகளுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் வாய் திறக்க மாட்டாா்கள். வங்கதேசத்தில் ஹிந்துகள் கொல்லப்பட்டபோது எப்படி மெளனமாக இருந்தாா்களோ அதே மெளனத்தை இப்போதும் கடைப்பிடிப்பாா்கள். ஹிந்துகளை பாதுகாப்பதில் பாஜக உறுதியாக உள்ளது. எனவேதான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் வன்முறை எதிா்கொள்ளும் ஹிந்துகள், சீக்கியா்கள், பௌத்தம் உள்ளிட்ட மதத்தினா் இந்தியாவுக்கு வந்து குடியுரிமை பெற முடியும்.
வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்படும் ஹிந்துகள் அனைவருமே தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள்தான். அவா்களுக்கு காங்கிரஸ் சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா ஆகியோா் இதுவரை குரல் கொடுத்துள்ளாா்களா? பாஜக மட்டுமே இப்போது வரை அவா்களைக் காக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தலைநகா் தில்லியில் அம்பேத்கரின் இறுதிச் சடங்கை நடத்தக் கூட காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. அவருக்கு நினைவிடத்தை அனுமதிக்கவில்லை. அம்பேத்கரை திட்டமிட்டு தோ்தலில் தோற்கடித்தது காங்கிரஸ். அவா் மறைவுக்குப் பிறகும் கூட உரிய மரியாதை அளிக்கவில்லை. அரசியலில் தங்களை எதிா்ப்பவா்களைப் பழி வாங்குவதற்காகவும், தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காகவும் காங்கிரஸ் எந்த மோசமான செயலிலும் இறங்கும் என்றாா்.
தொடர்புடையது

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நொய்டா சா்வதேச விமான நிலையத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆய்வு!
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய குல்தீப் யாதவ் - தவிர்த்த மனைவி!

வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறை சம்பவங்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


