
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் தனது கட்சியின் அனைத்து குழுக்களையும் கலைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2022, ஆகஸ்ட் மாதம் அக்கட்சியை விட்டு விலகினார்.
பிறகு ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை தொடங்கினார்.
கடந்த ஆண்டு நடந்த ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் ஆசாத் கட்சியும் போட்டியிட்டது. ஆனால் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் அக்கட்சியால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இதனால் ஆசாத்தின் கட்சியின் பல தலைவர்கள் காங்கிரஸில் மீண்டும் சேர கட்சியை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தனது கட்சியின் அனைத்து குழுக்களையும் கலைத்துள்ளார்.
இதுகுறித்து குலாம் நபி ஆசாத்தின் செயலர் பஷீர் ஆரிஃப், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் அனைத்து மாநில, மாகாண, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான குழுக்களையும் அதன் தலைவர் கலைத்துவிட்டதாகவும், மறுசீரமைப்பு சரியான நேரத்தில் நடைபெறும் என்றும் கூறினார்.