மகாராஷ்டிரத்திலும் ஹிந்திக்கு எதிர்ப்பு! என்ன நடக்கிறது?

மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிவசேனை(யுபிடி) கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 3 ஆவது மொழியாக ஹிந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது கல்விரீதியாக நியாயமற்றது என்றும் இது மாணவர்களின் உளவியல் நலனுக்கு ஏற்றது அல்ல என்றும் மகாராஷ்டிர மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு மொழி ஆலோசனைக் குழு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் "மகாராஷ்டிரத்தில் கல்வியில் ஹிந்தியைத் திணிப்பது மாநிலத்தின் பின்னடைவுக்கு வழிவகுக்கும். கல்வி ரீதியாக இது நியாயப்படுத்தப்படவில்லை. இது அறிவியல் ரீதியானதும் அல்ல. மேலும் மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாக பாதிக்கும், அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எனவே, மகாராஷ்டிரத்தில் 12 ஆம் வகுப்பு வரையிலும் மராத்தி, ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டும் இருக்க வேண்டும். மாநில கல்வித் துறை இதுதொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்னதாக எங்களுடன் ஆலோசித்திருக்க வேண்டும். எங்களிடம் மொழிசார்ந்த பல்வேறு நிபுணர்கள் இருக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

மாநில மொழி ஆலோசனைக் குழுவின் கடிதம் தொடர்பாக நேற்று புணேவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பட்னவீஸ்,

குழுவின் கடிதத்தை இன்னும் படிக்கவில்லை. எனினும் பள்ளிகளில் ஹிந்திக்கு மாற்றாக மராத்திக்கு சேர்க்கப்படவில்லை. பள்ளிகளில் மராத்தி மொழி கட்டாயமாகும். ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்வது கட்டாயமாகும். அவற்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். 3 ஆவதாக ஹிந்தி மொழி என்பது கட்டாயமல்ல.

​​ஹிந்தி கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை எங்களிடம் இருப்பதால் ஹிந்தியைத் தேர்வு செய்துள்ளோம். மற்ற மொழிகளைக் கற்பிக்க எங்களிடம் போதிய ஆசிரியர்கள் இல்லை.

பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்திக்கு மாற்றாக வேறு மொழியைக் கற்க வேண்டும் என்றால், குறைந்தது 20 மாணவர்கள் அந்த மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி தமிழ் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைத் தேர்வு செய்யலாம். எனவே சில பள்ளிகளில் 20- க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு மொழியைத் தேர்வு செய்தால் அதற்கான ஆசிரியரை நியமிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் கற்பிக்கப்படலாம். மாநில எல்லைகளில் உள்ள பள்ளிகளுக்கு இதனை பரிசீலிக்கப்படலாம்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக்கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்திலும் ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com