கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாகும் காஷ்மீர் மக்களை நினைத்தால்... ஆண்ட்ரியா வேதனை!
பெஹல்காம் தாக்குதல் மற்றும் காஷ்மீர் மக்கள் குறித்து நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (ஏப்.22) சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலரும் சிறுபான்மையினர் மீதான அவதூறு கருத்துகளை பதிவிட்டுவரும் நிலையில் நடிகை ஆண்ட்ரியாவின் பதிவு கவனம் பெற்றுள்ளது.
தனது இன்ஸ்டா பதிவில் ஆண்ட்ரியா கூறியதாவது:
வெறுப்பு வேண்டாம்
ஒரு காலத்தில் நானும் பெஹல்காமின் சுற்றுலாப் பயணிதான். தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நினைத்து எனது மனம் உடைந்தது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கூடுதல் கண்காணிப்புக்கும் ஆய்வுக்கும் உள்ளாகும் காஷ்மீர் மக்களை நினைத்து மேலும் மனம் உடைகிறேன்.
நாட்டில் பிரிவினைவாதம் அதிகரித்து வரும் நிலையில் குறிப்பிட்ட மதத்தினையோ / சமூகத்தினையோ பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது.
நான் பொதுவாக எதையும் சொல்வதில்லை. ஆனால், இதைச் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். வெறுப்புக்கு இங்கு இடமில்லை. எனது கமெண்ட் பாக்ஸிலும் நமது உலகத்திலுமே வெறுப்பு வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.