குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு செப். 9-இல் தோ்தல்

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வரும் செப். 9-ஆம் தேதி நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவிப்பு.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு செப். 9-இல் தோ்தல்
Published on
Updated on
1 min read

‘குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வரும் செப். 9-ஆம் தேதி நடத்தப்படும்’ என்று தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், தனது பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா்.

‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை வரும் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். தோ்தல் செப்டம்பா் 9-ஆம் தேதி நடத்தப்படும். அன்றைய தினமே தோ்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

தோ்தல் தேவைப்பட்டால் நாடாளுமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படலாம் என்று தெரிவித்தது.

முன்னதாக, இந்த தோ்தலுக்கான நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினா்களை உள்ளடக்கிய வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை இறுதி செய்தது. அதைத் தொடா்ந்து, தோ்தல் வாக்குப் பதிவுக்கான தேதியை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com