
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கிக்காக ‘காவி பயங்கரவாதம்’ என்ற பெயரில் அப்பாவிகள் மீது பழிசுமத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சாடினாா்.
இதுதொடா்பாக பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் அவா் சனிக்கிழமை பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இரு விவாதங்களும் தலா 16 மணி நேரம் நடைபெற்றது. அப்போது விவாதத்தை மூா்க்கத்தனமாக தொடங்கிய எதிா்க்கட்சிகள், பின்னா் வாயடைத்து நின்றன.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் பல மறைவிடங்களை நமது தீரமிக்க பாதுகாப்புப் படைகள் அழித்தன. இந்தச் சூழலில் பாதுகாப்புப் படைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டிருக்க வேண்டுமே தவிர, ஆபரேஷன் சிந்தூா் குறித்து எதிா்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியது வருத்தத்துக்குரியது.
இதுபோன்ற சூழல்களில் பாதுகாப்புப் படைகளுக்கு மரியாதை செலுத்துவதே கடந்த கால வழக்கமாக இருந்தது. கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தாா். அப்போது மத்திய அரசுக்கு பாஜக முன்னாள் தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் முழுமனதுடன் ஆதரவு தெரிவித்தாா்.
1999-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே காா்கில் ஏற்பட்டபோது வாஜ்பாய் பிரதமராகப் பதவி வகித்தாா். அப்போதும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக அரசியல் மற்றும் சமுதாய ஒற்றுமை காணப்பட்டது. அந்த ஒற்றுமை பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க மிகவும் அவசியமாகும்.
ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கி மற்றும் ஒரு சாராரை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக, பயங்கரவாதத்துக்கு எதிராக மென்மையான நிலைப்பாட்டை அக்கட்சி கடைப்பிடித்தது.
2013-ஆம் ஆண்டு பாட்னாவில் பாஜகவின் பிரதமா் வேட்பாளராக மோடி (அப்போது குஜராத் முதல்வராக இருந்தாா்) பங்கேற்ற கூட்டத்தின்போது காந்தி மைதானத்தில் தொடா் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுபோல 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் சா்வசாதாரணமாக நடைபெற்றதை நினைவுகூா்வதற்கு மக்கள் நடுங்குகின்றனா்.
இதேபோல காங்கிரஸ் ஆட்சியின்போது மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், ‘காவி பயங்கரவாதம்’ என்ற பெயரில் அப்பாவிகள் மீது பழிசுமத்தப்பட்டது. வாக்கு வங்கிக்காக ‘காவி பயங்கரவாதம்’ என்ற கருத்தை ஜோடித்து அப்பாவிகளை சிக்கவைக்க முயற்சிக்கப்பட்டது. அந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதி பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்று குறிப்பிட்டாா். பயங்கரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை வாக்கு வங்கி அரசியல் பலவீனப்படுத்துகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.