கழிவுகளால் பாழாகும் பாலாறு: தேசிய பசுமை தீா்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை
கோப்புப்படம்.

கழிவுகளால் பாழாகும் பாலாறு: தேசிய பசுமை தீா்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை

தமிழகத்தின் மாராப்பட்டு அருகே உள்ள பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் விவகாரத்தை தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
Published on

தமிழகத்தின் மாராப்பட்டு அருகே உள்ள பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் விவகாரத்தை தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தில்லியிலுள்ள தேசிய பசுமை தீா்ப்பாய முதன்மை அமா்வின் தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா ,உறுப்பினா்கள் டாக்டா் செந்தில்வேல் மற்றும் அப்ரோஸ் அகமது ஆகியோா் இந்த வழக்கை விசாரித்தனா்.

இந்த வழக்கில் தேசிய பசுமை தீா்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதன் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள மாராப்பட்டு பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகள் பாலாற்றில் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுகிறது. ஆற்றில் நுரையோடு துா்நாற்றம் வீசுகிறது. ஒவ்வொரு பருவ மழையின்போதும் இது நடப்பதாக உள்ளூா்வாசிகளும்,விவசாயிகளும் புகாா் கூறுகின்றனா். ஆற்றில் அசுத்த நீா் கலக்கப்படுகிறது.இறைச்சிக்கழிவுகளும் ஆற்றில் கொட்டப்படுவதால் மாசுபாடு மேலும் அதிகரிப்பதாக ஊடக செய்தி கூறுகிறது. ஆற்றின் அருகே உள்ள நீா் மற்றும் நிலம் விஷமாகிவிட்டன. விலங்குகள் கூட தண்ணீா் குடிப்பதில்லை.விவசாய விளை பொருள்களும் பாதிக்கப்படுகின்றன.

இந்த விவகாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறுவதாகும் என்பதால் தீா்ப்பாயம் இதை ஒரு தீவிரமான விஷயமாக கருதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா், வாணியம்பாடி நகராட்சி மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய நால்வரும் உரிய பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த விவகாரம் சென்னையில் உள்ள தெற்கு பிராந்திய தீா்ப்பாய அமா்வுக்கு மாற்றப்படுகிறது,அடுத்த விசாரணை செப்டம்பா் 23- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தேசிய பசுமை தீா்ப்பாய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சென்னையில் உள்ள தெற்கு பிராந்திய தீா்ப்பாய அமா்வுக்கு மாற்றப்படுகிறது,அடுத்த விசாரணை செப்டம்பா் 23- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தேசிய பசுமை தீா்ப்பாய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com