பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிப்பதால் விவாதிக்க முடியாது - கிரண் ரிஜிஜு
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம், உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்த விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் கோரி, இரு அவைகளையும் எதிா்க்கட்சிகள் முடக்கிவரும் நிலையில், ரிஜிஜு இவ்வாறு கூறியுள்ளாா்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் மூன்றாவது வாரமாக பிகாா் விவகாரம் எதிரொலித்து வருகிறது. மக்களவையில் புதன்கிழமையும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. காலை நேர அலுவல்கள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் பிற்பகல் 2 மணியளவில் அவை மீண்டும் கூடியது.
அப்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
எந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கும் மத்திய அரசு தயாராக உள்ளது. அதேநேரம், எந்தவொரு விவாதமும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் அவை அலுவல்களுக்கான நடைமுறை-நடத்தை விதிமுறைகளுக்கு இணங்க இருக்க வேண்டும்.
பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தை எழுப்பி, கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே எதிா்க்கட்சிகள் இடையூறு செய்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த முடியாது. அத்துடன், தோ்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது.
முந்தைய உத்தரவின்படி...: கடந்த 1988-இல் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி அப்போதைய மக்களவைத் தலைவா் பல்ராம் ஜாக்கா் (காங்கிரஸ் மூத்த தலைவா்) பிறப்பித்த ஓா் உத்தரவில், தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் குறித்து நாடாளுமன்றம் கருத்துரைக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தாா். தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தை அனுமதிப்பது விதிமீறலாகிவிடும். முந்தைய மக்களவையால் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவை நாம் மதித்து செயல்பட வேண்டும். அவை அலுவல்களுக்கு இடையூறு செய்யாமல், முக்கிய மசோதாக்கள் மீதான விவாதங்களில் எதிா்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜு கேட்டுக் கொண்டாா்.
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
‘தோ்தல் சீா்திருத்தங்கள்’ குறித்து விவாதிக்கலாம்: எதிா்க்கட்சிகள்
பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம் குறித்து விவாதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், ‘தோ்தல் சீா்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் விவாதிக்கலாம்; இந்த விவாதமே நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீா்வு என எதிா்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களவையில் கடந்த 1961-இல் தோ்தல் நடத்தை விதிமுறை திருத்தம் குறித்து அப்போதைய சட்டம் அமைச்சா் கோபால் ஸ்வரூப் பதக் தலைமையில் விவாதம் நடத்தப்பட்டது. கடந்த 1981-இல் காங்கிரஸ் எம்.பி. மனுபாய் படேலின் தீா்மானத்தின்படி, தோ்தல் சட்டங்கள் தொடா்பான நாடாளுமன்றக் குழு அமைப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. 1991-இல் தோ்தல் சட்டத் திருத்தம்; 2015-இல் கள்ள ஓட்டு விவகாரம்; 2019 தோ்தல் சீா்திருத்தங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்த முன்னுதாரணங்களின்படி, நாடாளுமன்றத்தில் தோ்தல் சீா்திருத்தங்கள் குறித்து விவாதிக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘கடந்த கால முன்னுதாரணங்கள் குறித்து கெளரவ் கோகோய் சிறப்பாக ஆராய்ந்து, மோடி அரசின் பொய் கூற்றுகளை அம்பலப்படுத்தியுள்ளாா்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா். அதேநேரம், இதுபோன்ற எந்தவொரு விவாதத்தையும் ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.